bbc.co.uk navigation

தெரிவுக் குழுவில் ததேகூ சேருவதுதான் வழி: தென்னாப்பிரிக்கா

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 ஆகஸ்ட், 2012 - 17:12 ஜிஎம்டி

தென் ஆப்பிரிக்க அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம்

இலங்கை வந்து அரச தரப்புடனும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனும் பேச்சுக்களை நடத்தியிருக்கும் தென்னாப்பிரிக்க குழு, இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதிலே ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நிலையைத் தீர்க்க, ஜனாதிபதியால் நியமிக்கப்படும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடம்பெறுவதுதான் வழியாகத் தெரிகிறது என்று கூறியுள்ளது.

அரசுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் கடந்த எட்டு மாதங்களாக தடைபட்டுள்ள நிலையிலேயே தென்னாப்பிரிக்காவின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.

தடைபட்டுள்ள இந்தப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்க தென்னாப்பிரிக்கா அனுசரணையாளராக இருக்க முன்வந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.

தென் ஆப்பிரிக்க அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம் பேட்டி

"மத்தியஸ்தம், அனுபவங்களை பகிர்தல் மட்டுமே"

இலங்கை சென்று திரும்பியுள்ள தென்னாப்பிரிக்க குழுவுக்கு தலைமையேற்றிருந்த அந்நாட்டின் சர்வதேச அபிவிருத்தித்துறை துணை அமைச்சர் இப்பராஹிம் இப்ராஹிம் தமிழோசைக்கு அளித்த செவ்வி.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

ஆனால் இலங்கை விஷயத்தில் மத்தியஸ்தராகவோ அல்லது அனுசரணையாளராகவோ பங்காற்ற தாங்கள் முயலவில்லை என்று தென்னாப்பிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான துணை அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம் பிபிசியிடம் தெரிவித்தார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் பேட்டி

"தென்னாப்பிரிக்கா போன்றோரின் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியம்"

இலங்கை அரசுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நிலையைத் தீர்க்க மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியம் எனத் தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

அரசுக்கும் தமக்கு இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாத சூழலில், ஒரு மூன்றாம் தரப்பு அனுசரணையாளரின் உதவி இன்றியமையாதது என்றும் அதை கூட்டமைப்பு வரவேற்கிறது எனவும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.

இலங்கை சென்ற தென்னாப்பிரிக்க குழுவினர் அரச தரப்பையும், கூட்டமைப்பினரையும் சந்தித்து பேசியுள்ளனர். அதன் போது இருதரப்புமே தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை தாங்கள் அறிந்து கொண்டாதாக இப்ராஹிம் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு கூட்டமைப்பினரும் வர வேண்டும் என்றும், அதன் மூலமே தீர்வு காண முடியும் எனவும் அரசு கூறுகிறது.

கூட்டமைப்போ அரசுக்கும் தமக்கும் இடையே ஒரு உடன்பாடு ஏற்பட்ட பிறகு தெரிவுக் குழுவில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யலாம் என்று கூறுகிறது.

இதன் காரணமாகவே பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

அரச தரப்பிடம் பேசிய பிறகு இரண்டாவது முறையாக கூட்டமைப்பினரை தாங்கள் சந்தித்து பேசிய போது அவர்கள் தெரிவுக் குழுவில் பங்கேற்பது என்கிற யோசனையை பரிசீலனை செய்வது போலத் தோன்றுகிறது என பிபிசியிடம் கூறினார் தென்னாப்பிரிக்க அமைச்சர் இப்ராஹிம்.

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் முடிந்த பிறகு இது தொடர்பிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் தென்னாப்பிரிக்காவில் இடம்பெறக் கூடும் என்று கூறிய சுரேஷ் பிரேமச்சந்திரன், கொழும்பிலுள்ள அந்நாட்டு தூதரகத்தின் அழைப்பின் பேரிலேயே இந்தச் சந்திப்புகள் நடந்தன எனவும் சுட்டிக்காட்டினார்.

BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.