bbc.co.uk navigation

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை குறித்து ரணில்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 பிப்ரவரி, 2012 - 13:15 ஜிஎம்டி
ரணில் விக்கிரமசிங்க

ரணில் விக்கிரமசிங்க

இலங்கை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு படிப்பினைகள் மற்றும் நல்லிணக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதனை ஒரு அடிப்படையாக கொள்ள முடியும் என்று முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.

இது தொடர்பாக கொழும்பில் அந்தக் கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க அவர்கள், அந்த அறிக்கையில் சில குறைபாடுகள் இருந்தாலும், அதன் பரிந்துரைகள் மிகவும் பெறுமதியானவை என்று கூறினார்.

அப்படியான ஒரு தீர்வு நடவடிக்கைகளில் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் இணைந்து செயற்பட முடியும் என்றும் அந்த அறிக்கையை அரசாங்கம் அங்கீகரித்துள்ள அதே நேரம், அதில் உள்ள பல விடயங்களை ஐக்கிய தேசியக் கட்சியும் ஏற்றுக்கொள்கிறது என்றும் ஆகவே அந்த பரிந்துரைகளை அரசாங்கம் முதலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்த ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை அரசாங்கம் இதுவரை அமல் படுத்தாதது குறித்து அதிருப்திகள் காணப்படுகின்றன என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்கள் குறித்து அரசாங்கம் எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்தி தீர்வுக்கான செயற்திட்டத்தை வெளியிட வேண்டும் என்றும் ரணில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை போர்க்காலத்தில் காணிகள் சம்பந்தமாகவும் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. அவை குறித்தும் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக தீர்வுகள் காணப்பட வேண்டும் என்றும் ரணில் கூறினார்.

அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப ஜனநாயக நிறுவனங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.