
கிழக்கு பல்கலை.மாணவர்களின் போராட்டம்
இலங்கையில் கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தர் நியமிக்கப்படும்வரை அங்கு தகுதி வாய்ந்த அதிகாரியாக பணியிலிருந்த பெரும்பான்மை இனத்தவர் ஒருவரை பதில் துணை வேந்தராக நியமிப்பதற்கு அரசு எடுத்திருந்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக துணையமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
துணையமைச்சர் கருணா செவ்வி
'கிழக்கு் பல்கலை. துணைவேந்தர் பதவி தமிழருக்கே': அமைச்சர் கருணா
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 'தகுதிவாய்ந்த அதிகாரியாக' பணியிலிருந்தவரை பதில் துணை வேந்தராக நியமிக்கும் அரசின் நடவடிக்கை கைவிடப்பட்டது': அமைச்சர் கருணா
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தர் ஒருவரை நியமிப்பதற்காக தமிழர்கள் மூவரின் பெயர்கள் சிபார்சு செய்யப்பட்டு, அவர்களில் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பதற்கு முன்னதாக குறுகிய கால நிர்வாகத்துக்காக தகுதிவாய்ந்த அதிகாரியாக பணியில் இருந்துவரும் ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டமை தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக துணையமைச்சர் முரளிதரன் குறிப்பிட்டார்.
இந்த சூழ்நிலையில், உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அந்த அறிவித்தலை உடனடியாக ரத்துசெய்து, புதிய துணை வேந்தரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தம்மிடம் உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தரின் கடமைகளுக்காக 'தகுதிவாய்ந்த அதிகாரி' என்ற பொறுப்பில் இருந்தவரையே நியமிப்பதாக தகவல் வெளியான நிலையில், அந்த நடவடிக்கையைக் கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர்கல்வி அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலில், பல்கலைக்கழக கவுன்சில் உறுப்பினரான பேராசிரியர் நிமால் ரஞ்சித் அத்தநாயக்க துணைவேந்தரின் கடமைகளை நிறைவேற்றும் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏற்கனவே கடந்த மூன்று வருடங்களாக பதில் துணைவேந்தராக கலாநிதி கே.பிரேம்குமார் கடமையாற்றிவந்துள்ளார்.
துணைவேந்தரின் கடமைகளுக்காக குறித்த அதிகாரி நியமிக்கப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல எனக் கூறிய பல்கலைக்கழக மாணவர்கள் வெள்ளிக்கிழமை முதல் விரிவுரைப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.
மாணவர்கள் வந்தாறுமூலை வளாக முன்றலில் ஒன்றுகூடி நிரந்தர துணைவேந்தர் ஒருவர் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும், அதுவரை ஏற்கனவே பதில்துணைவேந்தர் பதவிவகிப்பவர் தொடர்ந்தும் பதவியில் இருக்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களின் இந்தப் போராட்டம் நியாயமானது என்றும் துணையமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.






