
கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள்
இலங்கை கடற்பரப்பில் மீன்படித்த குற்றச்சாட்டின் பேரில் கைதான தமிழகத்தைச் சேர்ந்த 43 மீனவர்கள் எதிர்வரும் 27 ஆம் தேதி விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டிணம் அக்கரைப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த இவர்களும் அவர்கள் பயணித்த ஆறு விசைபடகுகளும் விடுவிக்கப்பட்டு இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவதாக தமிழக அரசின் நாகை மாவட்ட துணை மீன்வளத்துறை இயக்குநர் தெரித்ததாக உள்ளூர் பஞ்சாயத்தார் திருவளர்ச் செல்வன் தமிழோசையிடம் கூறினார்.
முன்னதாக இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்ததாக இவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை பிரதேசத்தின் வடகடல் பரப்பில் இவர்கள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்தார்கள் என்று கூறப்பட்டு, கைது செய்யப்பட்ட இவர்கள் விசாரணைகளுக்காக அங்குள்ள துறைமுக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக பயன்படுத்திய ஆறு இயந்திரப் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு திருகோணமலை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
"அப்துல் கலாம் அவர்களின் யோசனை ஏற்புடையதல்ல, அது நிரந்தர தீர்வையும் தராது"
இலங்கை மீனவர்கள் சங்கம்
தமிழக மீனவர்கள் இலங்கையின் வடகடல் பரப்பில் சட்டவிரோதமான முறையில் அத்துமீறி மீன்பிடிக்கிறார்கள் என்று இலங்கை தரப்பில் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது.
தற்போது மீன்வளம் கூடுதலாக இருக்கும் கிழக்கிலங்கையின் புல்மோட்டைப் பகுதிக்கு தமிழக மீனவர்கள் வருவது ஏற்கனவே இருநாடுகளுக்கும் இடையே மீனவர்கள் பிரச்சினையினால் ஏற்படும் உரசல்கள் மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

இந்திய இலங்கை கடற்பரப்பில் இருநாட்டு மீனவர்களும் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக, இருவரும் வாரத்தில் மூன்று நாள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லலாம் என இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாம் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்தக் கருத்துக்கு இந்திய மீனவர்கள் ஆதரவு தெரிவித்தாலும், இலங்கை தரப்பினர் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய யோசனை அல்ல என்று கூறியுள்ளனர்.
திருகோணமலையில் கைது செய்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் யாரையும் சந்திக்க செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று அங்கிருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.








