
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் கைதிகள் தாம் ஞாயிறன்று சிறைக்காவலர்களால் தாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும், இனிமேல் இப்படியான நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு கோரியும் அவர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஆனால், ஞாயிறன்று கைதிகளை பாதுகாவலர்கள் வழமையான சோதனைகளைச் செய்ய முயன்றபோது அவர்களிடம் இருந்து 19 கைத்தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறும், சிறைச்சாலைகள் அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகரான சிவலிங்கம் சதீஷ்குமார், அந்த நடவடிக்கையின் போதே அங்கு அமைதியீனம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இருந்த போதிலும், இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை செய்வதற்காக ஒரு அதிகாரிகள் குழுவை தமது அமைச்சு அங்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.








