
சிறைக் கைதிகள் மீது தாக்குதல்
இலங்கையின் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் சுமார் 60 பேர் அதிகாரிகளால் தாக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து தமிழோசையிடம் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள், சுமார் 30 அதிகாரிகளால், இந்தக் கைதிகள் கொட்டும் மழையில் நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டதாக தனக்கு முறைப்பாடு செய்யப்பட்டதாகக் கூறினார்.
விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் ஞாயிறன்று அனுட்டிக்கப்படும் நிலையில், அதனைக் கூறியே தாம் தாக்கப்பட்டதாக கைதிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.
கால் ஊனமுற்ற கைதிகளின் ஊன்றுகோல்கள் பறிக்கப்பட்டு அவற்றை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகவும் கைதிகள் தன்னிடம் முறைப்பாடு செய்துள்ளதாக பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தரப்பு மற்றும் அரச தரப்புக் கருத்துக்களைப் பெற உடனடியாக முடியவில்லை.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று தான் கலந்து கொள்ளவிருந்த இரண்டு பொது வைபவங்கள் பாதுகாப்பு தரப்பினரின் தலையீடு காரணமாக நிறுத்தப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தமிழோசைக்கு தெரிவித்துள்ளார்
இன்று விடுதலைப் புலிகளின் மாவீரர்தின நாள் என்பதை பாதுகாப்பு தரப்பினர் ஏற்பாட்டாளர்களிடம் சுட்டிக்காட்டி வைபவங்களை நடத்தக் கூடாது என வற்புறுத்தியதாகவம் அவர் கூறுகின்றார்.








