
புதிய சூரியவேவ கிரிக்கெட் அரங்கு
இலங்கையில் உள்ள முக்கிய கிரிக்கெட் மைதானங்களை பராமரிக்கும் பணியை இராணுவம் ஏற்கவுள்ளது.
இந்த மைதானங்களை பராமரிக்கத் தேவையான பணம் தன்னிடம் இல்லை என்று கிரிக்கெட் வாரியம் கூறுகிறது. ஆனால் இப்படி மைதானங்களை இராணுவத்திடம் ஒப்படைக்கும் செயல் இராணுவமயமாக்கல் இலங்கையில் மோசமான அளவுக்கு சென்றுள்ளதை காட்டுகிறது என்று சிலர் கூறுகின்றனர்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளை கூட்டாக நடத்திய இலங்கை, அந்தப் போட்டிகளுக்காக இரண்டு புதிய கிரிக்கெட் அரங்குகளை கட்டியது.
அதில் ஒன்று ஜனாதிபதியின் அம்பாந்தோட்டையில் இருக்கிறது. அதுதவிர ஏற்கனவே இருந்த ஒரு மைதானம் முழுமையாக சீரமைக்கவும்பட்டது.
இதற்காக பெரும் பொருள் செலவிடப்பட்டது. இந்தப் பணிகளுக்காக வாங்கப்பட்ட கடன் இன்னமும் அடைக்கப்படாததால் கிரிக்கெட் வாரியம் பெரும் கடன் சுமையில் இருக்கிறது.
இந்த நிலையில் தரைப் படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்றும் தலா ஒரு மைதானத்தை பராமரிப்பார்கள் என்று விளையாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
பரமரிப்புப் பணிகளை பொறுப்பெடுத்துக் கொள்வதுடன், போட்டி நடக்கும் நாட்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் படையினர் கவனித்துக் கொள்ள வாய்ப்புள்ளது.
கிரிக்கெட் வாரியத்தின் பண இருப்பு மிகவும் குறைந்து போய்விட்டதால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முன்னாள் வீரரும் தற்போதைய கிரிக்கெட் வாரிய உறுப்பினருமான சிதாத் வெட்டிமுனி பிபிசியிடம் தெரிவித்தார்.
அதேநேரம் படையினரின் பங்களிப்பு தமக்கு அதிர்ச்சியை அளிப்பதாக எதிர்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஏற்கனவே நாட்டில் காய்கறிகளை விற்பது, நகர்புறங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது போன்ற பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுவதை சுட்டிக் காட்டிய அவர், பாதுகாப்புச் செயலரின் தாளத்துக்கு ஏற்ப படையினர் ஆடுவதாக தெரிவித்தார்.
இப்படிச் செய்வதன் காரணமாக பொதுமக்களுக்கான வேலை வாய்ப்புக்கள் பறிபோவதுடன் இராணுவத்தின் ஊக்கத்தையும் அது குறைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கிரிக்கெட் வாரியம் கடந்த பல மாதங்களாக விளையாட்டு வீரர்களுக்கு சம்பளத்தை அளிக்கவில்லை. புதிதாக பொறுப்பேற்றுள்ள கிரிக்கெட் வாரியத் தலைவர் தனக்கு முன் அந்தப் பொறுப்பில் இருந்தவர் மைதானங்களை கட்ட ஏகப்பட்ட பணத்தை செலவிட்டுவிட்டதாக குற்றம் சாட்டுகிறார்.
ரசிகர்களோ ஏனைய பிரசித்திபெற்ற மைதானங்களும் பராமரிப்பின்றி புறக்கணிக்கப்படுவதாக வருந்துகின்றனர்.








