
இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் கூடாரங்கள்
இலங்கை போரின் இறுதிப் பகுதியில், 2009 ஆம் ஆண்டு் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றனவா என்பது குறித்து புலனாய்வு செய்யுமாறு ஆஸ்ரேலிய பொலிஸாருக்கு ஒரு கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஜூரிக்கள் அமைப்பு என்னும் அமைப்பே இந்தக் கோரிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அதற்கு ஆதாரமாக ஐநா செயலர் நியமித்த நிபுணர் குழுவின் ஆவணங்களும் மற்றும் ஜூரிக்கள் அமைப்பால் கடந்த ஆண்டு சேகரிக்கப்பட்ட ஆதாரங்களும் ஆஸ்ரேலிய பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஜூரிக்கள் ஆணைக்குழுவின் ஆஸ்ரேலிய தேசிய பிரிவின் தலைவரான ஜொண் டவுட் அவர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
ஒரு சர்வதேச போர்க்குற்ற தீர்ப்பாயத்திடம் சமர்ப்பிப்பதற்காகவே தாம் ஆதாரங்களை திரட்டிய போதிலும், அப்படியான ஒன்று இது வரை உருவாகாதாக காரணத்தால் இந்த ஆவணைங்களை தாம் ஆஸ்ரேலிய பொலிஸாரிடம் சமர்ப்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அப்படியான புலனாய்வை செய்வதற்கு ஆஸ்ரேலிய சட்டத்தில் இடம் இருப்பதாகக் கூறிய ஜொண் டவுட் அவர்கள், இலங்கையை சேர்ந்த தமிழ், சிங்கள மக்கள் ஆஸ்ரேலியாவில் கணிசமாக வாழும் நிலையில் அதற்கான கடப்பாடு அந்த நாட்டுக்கு இருப்பதாகவும் கூறுகிறார்.
இலங்கைப் போரில் ஈடுபட்ட இரு தரப்புக்கும் எதிராகவும் தம்மிடம் போர்க்குற்ற ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








