
மகிந்த ராஜபக்ஷ
இலங்கையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 60வது ஆண்டு மாநாடு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாட்டில் பிரிவினை வாதத்துக்கு இடமில்லையென்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நாட்டில் சிறுபான்மை இனத்தவர்கள் என்ற எண்ணம் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
இலங்கையில் அரைவாசியைத் தருவதாகவும், நாட்டில் ஒரு துண்டை பிரித்து தருவதாகவும் கூறி பிரிவினையாளர்களுக்கு கப்பம் செலுத்தும் விதத்தில் மக்களை தாம் ஏமாற்ற முடியாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமிழ், முஸ்லிம் சமூக மக்கள் சிறுபான்மை இனத்தவர்கள் அல்ல, இலங்கை என்பது தனியான ஒருமித்த நாடு என்பதை அவர்களுக்கு உணரவைப்பது தான் இன்றைய ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி தலைமையினான அரசாங்கத்தின் முக்கிய பணி என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
தமது கட்சி ஒருபோதும் தமிழ், முஸ்லிம் மக்களை ஏமாற்றிய கட்சி அல்லவென்றும் அலரி்மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாட்டில் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
1950களில் உயர்தட்டு மக்களைத் தோற்கடித்து, அடித்தட்டு மக்களின் பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுத்தமை, 1972ல் சுதந்திர அரசியலமைப்பு மூலம் நாட்டுக்கு பிரிட்டனிடமிருந்து முழுமையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தமை மற்றும் 2009ம் ஆண்டில் பயங்கரவாதத்தைத் தோற்கடித்தமை போன்ற முக்கிய நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே செய்து முடித்துள்ளதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பெருமைப்பட்டுக்கொண்டார்.








