bbc.co.uk navigation

சரத் என். சில்வா மீது குற்றச்சாட்டுக்கள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 ஆகஸ்ட், 2011 - 17:01 ஜிஎம்டி
முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வா- (கோப்புப் படம்)

சரத் என்.சில்வா முன்னிலையில் மகிந்த பதவிப் பிரமாணம்- (கோப்புப் படம்)

இலங்கையின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வா மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்துள்ள முன்னாள் நீதிபதிகள் 14 பேர், சரத் என்.சில்வா, அவரது பதவிக்காலத்தில் நீதிபதிகளின் பதவி நீக்கம் மற்றும் பதவி உயர்வு போன்ற விடயங்களில் முறைகேடாக நடந்து கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அண்மைக் காலத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை பகிரங்கமாகக் கூறிவந்த நிலையில், அடிக்கடி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தவர் முன்னாள் தலைமை நீதியரசர் சரத். என்.சில்வா.

1999ம் ஆண்டு முதல் கடந்த 2009ம் ஆண்டு வரையான அவரது பத்தாண்டு பதவிக் காலத்தில் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் மிக்க பல நிகழ்வுகளுக்கு பின்னணியாக இருக்கின்ற பல தீர்ப்புகளை முன்னாள் தலைமை நீதியரசர் சரத். என்.சில்வா வழங்கியவர்.

வடக்கு கிழக்கு பிராந்தியங்களை மீண்டும் தனித்தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்டமை, சந்திரிகாவின் இரண்டாவது தவணை ஆட்சி ஒரு ஆண்டு முன்கூட்டியே முடிவடைந்தமை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட ஹெல்பிக் ஹம்பாந்தோட்டை வழக்கு விவகாரம், சந்திரிகா அரசு விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட பீ-டொம் என்கின்ற சர்வதேச சுனாமி உதவிகளை பங்கிடும் நடைமுறை செல்லாது என்று அறிவிக்கப்பட்டமை, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்கு மாறியதால் அவர்களின் நாடாளுமன்ற பதவி இழக்கமாட்டார்கள் என்று விளக்கம அளிக்கப்பட்டமை போன்ற அரசியல் ரீதியில் திருப்பு முனைகளாக அமைந்த பல வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கியவர் சரத் என்.சில்வா.

மகிந்த ஆட்சி மீதான விமர்சனப் போக்கு

சரத் என்.சில்வா முன்னிலையில் மகிந்த பதவிப் பிரமாணம்- (கோப்புப் படம்)

சரத் என்.சில்வா முன்னிலையில் மகிந்த பதவிப் பிரமாணம்- (கோப்புப் படம்)

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சரத். பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்த இவர், அதன் பின்னர் மகிந்த ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை பகிரங்கமாகவே கூறிவந்தார்.

மக்களின் இறைமைக்கு நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒரு சவாலாகுமா என்ற தலைப்பில் அண்மையில் கருத்தரங்கு ஒன்றிலும் சரத் என்.சில்வா பேசியிருந்தார்.

அத்தோடு, ஊழலுக்கு எதிரான குரல் என்ற ஜேவிபி சார்பு இணையதள அங்குரார்ப்பணத்திலும் முன்னாள் தலைமை நீதியரசர் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.

இப்போது, ஜனாதிபதி மகிந்தவை சந்தித்துள்ள முன்னாள் நீதிபதிகள் 14 பேர், சரத் என்.சில்வாவின் பதவிக் காலத்தில் நீதிபதிகள் 42 பேர் பலவந்தமாக ஓய்வு பெறச் செய்யப்பட்டதாகவும் அவர்களில் பலர் தற்கொலை செய்து கொண்டதாகவும் சிலர் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர்.

சரத் என். சில்வா தலைமை நீதியரசராக இருந்தபோது, அவர் புரிந்த செயற்பாடுகளை கவனத்தில் கொண்டால், அவருக்கு மற்றவர்களை விமர்சனம் செய்ய எவ்வித உரிமையும் இல்லையென்று முன்னாள் நீதிபதி ஜி.டி.குலதிலக்க கூறினார்.

இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் தலைமை நீதியரசரர் சரத் என்.சில்வாவின் கருத்துக்களைப் பெற பிபிசி எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.