
லான்ஸ் ஆம்ஸ்டிராங்
டூர் த பிரான்ஸ் நெடுந்தூர சைக்கிள் போட்டியை ஏழு முறை வென்ற லான்ஸ் ஆம்ஸ்டிராங், தன் மீதான ஊக்கமருந்து குற்றச்சாட்டுகளை எதிர்த்து இனி தான் போராடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
தான் நிரபராதி ஆனாலும் தன் மீதான 'அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை' எதிர்த்து எதிர்த்து சோர்ந்துபோய்விட்டதால், இனி அவற்றை விசாரிக்கும் நடைமுறைக்கு தான் உட்படப்போவதில்லை என தீர்மானித்திருப்பதாக இந்த 40 வயது அமெரிக்க வீரர் அறிவித்துள்ளார்.
இவரை விசாரித்து வந்த ஊக்க மருந்து பயன்பாடு எதிரான அமெரிக்க நிறுவனம் (USADA), இனி இவர் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும் என்றும், அவர் வாங்கிய ஏழு டூர் த பிரான்ஸ் பட்டங்களையும் பறிக்கப்படும் என்றும் கூறுகிறது.
2005ஆம் ஆண்டு ஆம்ஸ்டிராங் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், 2009 -2012 காலப்பகுதியில் மீண்டும் இவர் போட்டிகளில் பங்கேற்றிருந்தார்.
1996ஆம் ஆண்டு முதலே இவர், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளைப் பயன்படுத்தி வந்தார் என USADA குற்றம்சாட்டியது.
இந்தக் குற்றச்சாட்டுகளை கடந்த திங்களன்று விசாரித்த அமெரிக்க நீதிமன்றம் ஒன்று ஆம்ஸ்டிராங்கின் பிரதிவாதங்களை ஏற்க மறுத்திருந்தது.
தன் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்து ஆம்ஸ்டிராங் தொடர்ந்து போராடத் தயாரா என்பதற்கு அவருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
அந்த நிலையில்தான் ஆம்ஸ்டிராங் தனது அறிவிப்பைச் செய்துள்ளார்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தவரான ஆம்ஸ்டிராங் குணமடைந்து அதன் பின்னர் தனது டூர் த பிரான்ஸ் பட்டங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.







