
ஸ்டீஃபன் கிப்ரோட்டிச்
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் மராத்தன் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற உகாண்டாவின் ஸ்டீஃபன் கிப்ரோட்டிச் நாடு திரும்பிய போது உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
நாற்பது ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் உகாண்டா பெற்றுள்ள முதல் தங்கப் பதக்கம் இதுதான்.
விமான நிலையத்திலிருந்து அதிபர் மாளிகை செல்லும் வழியெங்கும் பெரும் திரளான மக்கள் அவருக்கு வாழ்த்து கூறி வரவேற்பளித்தனர்.
அதிபர் யொவேரி முசேவினியுடன் காலை உணவுக்கு அழைக்கப்பட்ட கிப்ரோட்டிச்சுக்கு 80,000 டாலர்கள் பரிசுக்கான காசோலையையும் அவர் வழங்கினார்.
உகாண்டா சிறைச்சாலை ஒன்றில் சிறைக் காவலராக பணியாற்றும் ஸ்டீஃபன் கிப்ரோட்டிச்சை ஒன்பது படிநிலைகள் உயர்த்தி அவரை உதவி கண்காணிப்பாளராகவும் அதிபர் நியமித்துள்ளார்.
கிப்ரோட்டிச் தங்கப் பதக்கம் வென்றதை அடுத்து, தமது தடகள விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் விஷயங்களில் கூடுதலான முதலீடுகள் செய்யப்படும் எனவும் அதிபர் முசேவினி அறிவித்துள்ளார்.







