
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் கடைசி தினத்தன்று இந்தியாவுக்கு ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
ஆடவருக்கான மல்யுத்தப் போட்டியின் 66 கிலோ ஃபிரீ ஸ்டைல் எடைப் பிரிவில் இந்தியாவின் சுஷில் குமார் ஜப்பானிய வீரர் டட்சுஹிரோ யோனெமிட்சுவிடம் 1-3 என்கிற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார்.
தங்கப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து, அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இதன் மூலம் இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் தனிப்பிரிவில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் என்கிற பெருமையை சுஷில் குமார் பெற்றுள்ளார்.
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் சுஷில் குமார் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
சுஷில் குமார் பெற்றுள்ள வெள்ளிப் பதக்கத்துடன் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி பெற்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஒலிம்பிக் போட்டிகளை விட இருமடங்காகும்.
கடந்த 24 ஆண்டுகளில் மல்யுத்தப் போட்டிகளில் இப்போதுதான் ஜப்பான் முதல் முறையாக ஒரு தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளது.
இதுவரை லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் ஜப்பான் நான்கு தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளது.
இந்திய ரயில்வேத்துறையில் பணியாற்றி வரும் சுஷில் குமார் தான் மல்யுத்தப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் முதலில் பதக்கம் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது







