
ஜமைக்காவின் தலைநகரில் கொண்டாட்டம்
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவருக்கான 200 மீட்டர் போட்டியில் உசைன் போல்ட் தங்கப் பதக்கம் வென்றதை அடுத்து ஜமைக்காவின் தலைநகர் கிங்ஸ்டனில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஒலிம்பிக் விளையாட்டுகளில் முதல் முறையாக ஆடவருக்கான 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் அடுத்தடுத்த போட்டிகளில் வென்றவர் என்கிற பெருமையை லண்டனில் உசைன் போல்ட் வியாழக்கிழமை இரவு பெற்றார்.
கிங்ஸ்டன் நகரில் இரவு முழுவதும் மக்கள் நாட்டின் கொடிகளை ஏந்தி, ஒலிப்பான்களை ஒலித்தும், ஆடியும் பாடியும் தமது வீரர்களின் வெற்றியை கொண்டாடினர்.
200 மீட்டர் ஓட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் ஜமைக்கா பெற்றது கொண்டாட்டங்களின் உற்சாகத்தை மேலும் அதிகப்படுத்தியது.

வாரன் வியர், உசைன் போல்ட், யொஹான் பிளேக்
வெள்ளிப் பதக்கத்தை யொஹான் பிளேக்கும், வெண்கலப் பதக்கத்தை வாரன் வியரும் வென்றனர்.
ஒலிம்பிக் சாதனையை படைத்த பிறகு மற்றொரு ஒலிம்பிக் பிரபலமான கார்ல் லீவிஸை உசைன் போல்ட் விமர்சனம் செய்துள்ளார்.
மற்ற நாடுகளை விட ஜமைக்காவில் விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கை கடுமையாக இல்லை என்கிற ரீதியில் கார்ல் லீவிஸ் தெரிவித்த கருத்துக்களையே போல்ட் விமர்சனம் செய்துள்ளார்.







