
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள அணிகள்
லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் தமது நாட்டு மகளிர் இறகுப் பந்து அணியினர் தெரிந்தே தோல்வியடையும் வகையில் விளையாடினர் என்று இந்தோனேஷியா ஒலிம்பிக் அணியின் ஒரு அதிகாரி பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அடுத்தச் சுற்றில் சுலபமான ஒரு போட்டியை எதிர்கொள்ளும் நோக்கில், அந்த வீராங்கணைகள், தமது அணி இடம்பெற்றிருந்த பிரிவின் கடைசிப் போட்டியில் அவ்வகையில் விளையாடினர் என்றும் அந்த அதிகாரி தெவித்துள்ளார்.
மோசமான வகையில், தோல்வியுறும் எண்ணத்துடன் விளையாடிய இரண்டு இந்தோனேஷிய ஜோடி மற்றும் தென் கொரியா, சீனா ஆகியவற்றிலிருந்து தலா ஒரு ஜோடியையும் சர்வதேச இறகுப் பந்து சம்மேளனம் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து பங்குபெறுவதிலிருந்து தடை விதித்தது.
இதனிடையே முன்னர் ஒலிம்பிக்ஸில் இறகுப் பந்துப் போட்டியில், இந்தோனேஷியா சார்பில் தங்கப் பதக்கம் வென்றவரான அலன் புடிகுஸுமா, இந்த வகையில் தான்கூட முன்னர் தெரிந்தே சில போட்டிகளில் தோல்வியடையும் வகையில் விளையாடியாதாகவும் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள யு யாங்
முக்கியமான போட்டிகளுக்கு உடல் சக்தியை சேமித்து வைத்துக் கொள்ளும் வகையிலேயே இவ்வாறு தாமும் செய்ததாக புடிகுஸுமா கூறியுள்ளார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள சீன வீரர்களில் ஒருவரான யு யாங், இறகுப் பந்துப் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தமது நாட்டு அணி ஒலிம்பிக் உணர்வுகளை வெளிப்படுத்தவில்லை என்று கூறி சீனாவின் அரசு தொலைக்காட்சியில் அதன் இறகுப் பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் மன்னிப்பு கோரியுளார்.








