
சாயினா நெஹ்வால்
இந்தியாவின் இறகுப் பந்து வீராங்கணை சாயினா நெஹ்வால், லண்டன் ஒலிம்பிக் போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
காலிறுதிப் போட்டியில் அவர் டென்மார்க்கின் டைன் பௌனை 21-15, 21-20 என்கிற நேர் செட்களில் வென்றார்.
அரையிறுதிப் போட்டியில் அவர் இறகுப் பந்து விளையாட்டில் உலகதரப் பட்டியலின் முதலிடத்தில் இருக்கும் வாங் யிஹானை எதிர்த்து விளையாடுவார்.
இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்ஸில் இறகுப்பந்து ஆட்டத்தின் அரையிறுதிக்கு தகுதி பெறும் முதல் பெண்மணி சாயினா நெஹ்வால்தான்.
காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பிபிசியிடம் பேசிய சாயினா நெஹ்வால், இந்த வெற்றி தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றும், அடுத்த போட்டி உலக தரவரிசையின் முதலிடத்தில் இருக்கும் வீராங்கணைக்கு எதிரான போட்டி கடுமையானதாக இருக்கும் என்றாலும் தான் அதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எனினும் ஆடவர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் பாரபள்ளி காஷ்யப், மலேஷியாவைச் சேர்ந்த உலகின் முதல் நிலை ஆட்டக்காரரான வை சாங் லீயிடம் நேர் செட்களில் தோல்வியடைந்தார்.








