
ஒம் யான் ஷோல்
லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸில், எடை தூக்கும் போட்டியில் வட கொரிய வீரர் ஒம் யான் ஷோல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஆடவருக்கான 56 கிலோ எடைப் பிரிவில் அவர் மொத்தமாக 293 கிலோ எடையைத் தூக்கி ஒலிம்பிக் சாதனை படைத்துள்ளார்.
இது அவரது உடல் எடையை விட மூன்று மடங்கு அதிகம்.
மிகவும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஒலிம்பிக் சாதனை படைத்தது மட்டுமல்லாமல், இந்தப் பிரிவுக்கான உலக சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார்.
போட்டி தொடங்குவதற்கு முன்னர் ஒம் யான் ஷோல் பெருமளவு அறியப்படாத ஒரு வீரராகவே இருந்தார் என்று பிபிசியின் விளையாட்டு விமர்சகர் காலின் பிரைஸ் கூறுகிறார்கள். உலகத் தரவரிசையில் இரண்டாம் நிலையில் இருக்கும் 'பி' பிரிவில் இருக்கும் ஒரு வீரர் கிளீன் அண்ட் ஜெர்க்கில் 168 கிலோ எடையை தூக்கியது அசாதாரணமான ஒன்று எனவும் அவர் கூறுகிறார்.
இருபது வயதாகும் ஒம் ஸ்னாட்சில் 125 கிலோ எடையைத் தூக்கினர்.
நடப்பு உலக சாம்பியனான வூ ஜிங் பாவே இந்தப் போட்டியில் வெல்வார் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் 289 கிலோ மட்டுமே தூக்கிய அவரால் வெள்ளிப் பதக்கமே பெற முடிந்தது.
ஜூடோவிலும் ஒரு தங்கம்

கும் ஏ அன்
வடகொரிய அணி மகளிருக்கான ஜூடோப் போட்டியிலும் ஒரு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. 52 கிலோ எடைப் பிரிவில் அந்நாட்டின் கும் ஏ அன், க்யூபாவின் யேனர் அகோஸ்டாவை வென்றார்.
நடைபெற்று வரும் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பெற்ற முதல் தங்கப் பதக்கமும் இதுவே.
2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் கும் ஏ அன் இதே எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். அதே போல அகோஸ்டாவும் வெள்ளி பதக்கம் பெற்றிருந்தார், ஆனால் அப்போது அவர் 48 கிலோ எடைப் பிரிவில் பங்கு பெற்றார்.







