
வெற்றிக் களிப்பில் ஜாம்பிய அணி வீரர்கள்
ஆப்பிரிக்க கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள ஜாம்பியா அணி, தனது வெற்றியை 19 ஆண்டுகளுக்கு முன்னர் விமான விபத்தில் கொல்ல்பட்ட தனது சக வீரர்கள் 18 பேருக்கும் அர்ப்பணம் செய்துள்ளது.
இறுதிப் போட்டியில் மோதிக்கொண்ட ஜாம்பியா அணியும் ஐவரிக்கோஸ்ட் அணியும் ஆரம்பம் முதலே, 120 நிமிடங்களுக்கு 0-0 என்ற கணக்கில் போட்டியை விறுவிறுப்பாக கொண்டுசென்றன.
இறுதியில் ஃபெனால்ட்டி முறைக்கு வந்தபோதும் இரண்டு அணிவீரர்களும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டனர்.
ஃபெனால்ட்டியின் போதும் இரண்டு அணிவீரர்களும் மாறிமாறி கோல்களைப் போட்டனர்.
ஸடன்-டெத் வெற்றி
அடுத்தகட்டமாக, ஸடன்-டெத் ஸ்பாட்-கிக் நிலைக்கு போட்டி சென்றபோது, ஐவரிகோஸ்ட் வீரர் ஜேர்வின்ஹோ ஒரு பந்தை வீணாக்க, அடுத்தபடியாக ஜாம்பியா வீரர் ஸ்ட்டோஃபிரா சூன்சூ கோல் போட்டு போட்டியை முடித்துவைத்தார்.
இறுதியில் 8-7 என்ற கணக்கில் ஐவரிகோஸ்ட்டை வெற்றிகொண்ட ஜாம்பியா வரலாற்றில் முதற்தடவையாக ஆப்பிரிக்க கோப்பையை தனதாக்கிக் கொண்டது.
1993 இல் உலககோப்பை தகுதிப்போட்டிக்காக செனகல் நோக்கிப் பயணித்த ஜாம்பிய அணிவீரர்கள் அத்தனைப்பேரும் விமானம் புறப்பட்ட உடனேயே விபத்தில் கொல்லப்பட்டனர்.
இவர்களின் நினைவாக இந்த கோப்பையை அர்ப்பணித்த ஜாம்பிய அணி, இனி அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஆப்பிரிக்க கோப்பை போட்டிகளுக்காகவும் 2014ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகளுக்காகவும் தன்னைத் தயார்படுத்தி வருகின்றது.








