
'ஐஸ் ஃபிஷ்ஷிங்' : 11 நாட்டு அணிகள் போட்டியிடுகின்றன
வேர்ல்ட் ஐஸ் ஃபிஷ்ஷிங் சாம்பியன்ஷிப் என்ற உறைபனியில் மீன்பிடிக்கும் உலகக் கோப்பைப் போட்டியை இம்முறை கசக்ஸ்தான் நடத்துகிறது.
அல்மாட்டி நகருக்கு வெளியே உள்ள ஏரியொன்றில் உறைந்து போயிருக்கும் ஏரியொன்றில் மீன்பிடிக்க 11 நாடுகளைச் சேர்ந்த மீனவர் அணிகள் போட்டியில் ஈடுபட்டிருந்தன.
உறைந்திருக்கும் எரியின் நாலாபுறங்களிலும் காத்திருந்த போட்டியாளர்கள் போட்டி ஆரம்பமாகும் அறிவிப்பு வெளியானதும், அவர்களிடமுள்ள கருவியொன்றைக் கொண்டு ஐஸ் பாறைகளை துளையிடத் தொடங்கினார்கள்.
ஐஸ் படிமத்துக்கு கீழே இருக்கும் தண்ணீருக்குள் நீந்திக்கொண்டிருக்கும் மீன்களைக் குறிவைத்து, அந்தத் துளைகளுக்குள்ளே மீன் உணவுத் துண்டுகள் செருகிய தூண்டிலை இறக்கிவிட்டு ஐஸ் ஃபிஷ்ஷிங் போட்டியாளர்கள் காத்திருந்தார்கள்.
பரந்துவிரிந்து, உறைந்துபோயிருக்கும் ஏரியில் நின்றுகொண்டிருந்த போட்டியாளர்கள் குளிரைத் தாங்கக்கூடிய, உடல் சூட்டை தக்கவைத்திருக்கக் கூடிய சிறப்பு உடைகளை அணிந்திருந்தார்கள்.
ஐரோப்பாவில் உள்ள மற்றபல நாடுகளைப் போல கசக்ஸ்தானும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் மிகமோசமான குளிரை எதிர்கொண்டிருக்கிறது.
இங்கு சராசரியாக மைனஸ்20 என்ற அளவில் வெப்பநிலை குறைந்து ஊரே உறைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
மிக நுணுக்கமான போட்டி விதிகளையும் பயிற்றுனர்களையும் கொண்டுள்ள இந்தப் போட்டிக்கு இதுதான் உகந்த காலநிலை.
இரண்டு நாட்கள் நடக்கும் இந்தப் போட்டியில் கூடுதலான மீன்களைப் பிடித்த அணியே ஒன்பதாவது ஐஸ் ஃபிஷ்ஷிங் உலகக் கோப்பையை தட்டிக்கொள்ளவுள்ளது.








