bbc.co.uk navigation

ஒலிம்பிக் போட்டிகள்:சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 ஜனவரி, 2012 - 13:06 ஜிஎம்டி

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் முக்கிய விளையாட்டரங்கம்

இந்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே நிர்ணயம் செய்வதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரிட்டனின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹ்யூ ராபர்ட்ஸன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் விளையாட்டுகளில் முதல் முறையாக உலகளவில் இந்தப் போட்டிகள் மீது பந்தயங்கள் கட்டப்படுவதை கணகாணிக்க ஒரு சிறப்பு புனாய்வுப் பிரிவு ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக ஆசியாவில் நடைபெறும் சட்டவிரோத சூதாட்டச் செயல்பாடுகள்தான் ஒலிம்பிக் போட்டிகளின் நற்பெயருக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும் ராபர்ட்ஸன் கூறியுள்ளார்.

உலகளவில் சட்டவிரோத சூடாட்டத் தொழிலில் ஆண்டொன்றுக்கு 140 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு பணம் புழங்குகிறது என்று சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் தெரிவிக்கிறது. மேலும் ஊக்க மருந்து பயன்பாட்டைவிட சர்வதேச விளையாட்டுகளுக்கு கேடு ஏற்படுத்தக் கூடிய வல்லமை சட்டவிரோத சூதாட்டத் தொழிலுக்கு உள்ளது என்றும் ஐ ஓ சி சுட்டிக்காட்டியுள்ளது.

எனவேதான் இதுவரை இல்லாத வகையில், சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் போட்டிகளின் மீது பந்தயங்கள் கட்டப்படும் போது அவற்றை கண்காணிக்க ஒரு பிரிவு ஏற்படுத்தப்படுவதாக பிரிட்டனின் விளையாட்டுத்துறை அமைச்சர் கூறுகிறார்.

கடும் கண்காணிப்பு

சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் ழாக் ரக்கர் இது தொடர்பில் ஒரு உயர்மட்ட செயலணியை அமைத்துள்ளதாகவும், அதில் தானும் ஒரு அங்கமாக இருப்பதாகவும் ஹ்யூ ராபர்ட்ஸன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்களை இப்படியான விடயம் தொடர்பில் நீதிமன்றத்தின் முன் நிறுத்திய அனுபவமும் தங்களுக்கு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் போது சட்டவிரோதமான வகையில், போட்டிகளின் மீது பந்தயங்களை கட்டும் நோக்கில் கூட்டணி அமைத்து செயல்படும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளதாக தாங்கள் கவலைப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இப்போட்டிகளின் போது சட்டவிரோதமான வகையில் சூதாட்டம் இடம்பெறுவதை தடுக்க பிரிட்டனின் மாநகர காவல்துறையினர், சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போலுடன் சேர்ந்து செயல்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகளின் போது ஊழலை தடுக்க தங்களால் முடியும் என்பதை காட்ட பிரிட்டிஷ் அரசாங்கம் ஆர்வமாக உள்ளது என்றும் ஹ்யூ ராபர்ட்ஸன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஆசிய நாடுகளுக்கு அப்படியான வல்லமை இல்லை என்பதை மென்மையாக சுட்டிக்காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளின் போது, ஒரு ஆட்டத்தின் மீது முழுமையாக பந்தயம் கட்டப்படுவதற்கு அப்பால், இடையிடையே ஒரு குறிப்பிட்ட சமயத்தில் போட்டி எப்படி இருக்கும் என்பது தொடர்பில் அதிக அளவில் பணம் பந்தயமாக கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், போட்டியை நடத்தும் ஏற்பாட்டாளர்கள் மிகவும் விழிப்பாக இருக்க நேரிடும்.

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.