
போர் முடிந்தும் பாஸ் நடைமுறை ஏன்?: மீனவர்கள் கேள்வி
இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் உள்ள சுமார் 8000 மீனவ குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் பேர் மீன்பிடி தொழிலில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றார்கள்.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு தரப்பினரின் ஊடாக அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தபோதும் தீர்வுகள் கிடைக்கவில்லை என மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூறுகின்றார்கள்.
இந்தப் பிரச்சினைகளை தென்பகுதியில் உள்ள சிங்கள மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஊடகங்களின் ஊடாக வெளிப்படுத்தி அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரணையுடன் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியது.
யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் மீன்பிடிப்பதற்கு மீண்டும் பாஸ்நடைமுறை வந்துள்ளது. இதனால் மன்னார் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடி தொழிலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
நீண்ட காலமாக இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பது முன்னரைவிட அதிகரித்துள்ளது, இதனால் மன்னார் மாவட்ட மீனவர்கள் பெரும் சிரமங்களையும் கஸ்டங்களையும் எதிர்நோக்கியிருக்கின்றார்கள் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, பாஸ் நடைமுறைகள் நடைமுறையில் இருக்கும் நிலையில் தென்பகுதி மீனவர்கள் அத்துமீறி மன்னார் கடற்பரப்பில் பிரவேசித்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதனாலும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு கஸ்டங்கள் அதிகரித்திருப்பதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வட கிழக்கு பிரதேச இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் சுட்டிக்காட்டினார்.








