Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 29 ஜுலை, 2011 - பிரசுர நேரம் 16:48 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
'போர்க் குற்ற வழக்கு வாய்ப்பில்லை'- ரணில்
 
ரணில் விக்ரமசிங்க மற்றும் மகிந்த ராஜபக்ஷ- கோப்பு படம்
ரணில் விக்ரமசிங்க மற்றும் மகிந்த ராஜபக்ஷ- கோப்பு படம்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை தாபித்த ரோம் சமவாயத்தில் கையெழுத்திடாத இலங்கை போர்க் குற்றம் தொடர்பான வழக்குக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என்று இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சானல் 4 தொலைக்காட்சி செய்தியில் போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை அரசின் உயர்மட்டம் மீதும் இலங்கை இராணுவத்தினர் மீதும் மீண்டும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு லண்டனில் பொதுநலவாய பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வந்தருந்த ரணில் விக்ரமசிங்கவை, பிபிசி தொடர்பு கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அரசாக அங்கீகரிக்கும் போக்கை தெற்கு சூடான் முன்னெடுக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் லியாம் ஃபொக்ஸ் மற்றும் வெளியுறவு மற்றும் பொதுநலவாயம் தொடர்பான துணை அமைச்சர் அலெஸ்ட்டார் பேர்ட் ஆகியோரையும் சந்தித்துள்ள ரணில் விக்ரமசிங்க, அவர்களுடன் எதுபற்றி பேசினார் என்று பிபிசி சார்பில் கேட்கப்பட்டது.

குறிப்பாக, இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்தே பேச்சு நடத்தப்பட்டதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டை அவர்களுக்குத் தெளிவு படுத்தியதாகவும் ரணில் கூறினார்.

‘பேசித் தீர்த்துக் கொள்ளலாம்’

ரணில் தேர்தல் பிரசாரத்தில்
'போர்க்குற்றம் செல்லாது'- ரணில்

இலங்கையின் பிரச்சனையை, முடிந்தால் இலங்கைக்குள்ளேயே தீர்த்துக்கொள்ளவே முயற்சிக்க வேண்டும் என்று தமது நிலைப்பாட்டைக் கூறியதாக தெரிவித்த ரணில், அரசியல் தீர்வுத்திட்டம் பற்றி பேச்சு நடத்தி, இழக்கப்பட்ட உயிர்களுக்காக என்ன வகையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று ஆராய வேண்டும் என்று எடுத்துரைத்ததாகவும் பிபிசியிடம் கூறினார்.

தமது சந்திப்பில், சானல் 4 செய்திகள் பற்றி பேச்சு நடத்த வில்லையென்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், ஆனால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை தாபித்த ரோம் சமவாயத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளாத போது, போர்க் குற்றம் தொடர்பான வழக்குக்கு இலங்கை செல்ல வேண்டிய நிலை ஏற்படாது என்று கருத்து தெரிவித்தார்.

அரசியல் தீர்வுத்திட்டம் பற்றிய பிரச்சனைகளைத் தீர்த்துக்கொண்டால், போர்க்குற்றம் தொடர்பான பிரச்சனைகளையும் பேசித்தீர்த்துக் கொள்ளமுடியும் என்ற தொனியிலும் ரணில் விக்ரமசிங்க பதில் கூறினார்.

தெற்கு சூடான்- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

புதிதாக மலர்ந்த தேசம் தெற்கு சூடான்
புதிதாக மலர்ந்த தேசம் தெற்கு சூடான்
இதற்கிடையே, புதிதாக மலர்ந்துள்ள தெற்கு சூடானை பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்றத்துக்குள் அனுமதிப்பதற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறதே என்று கேட்டபோது, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் அமைக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துடன் தெற்கு சூடான் தொடர்புகளை வைத்திருந்தாலேயே தமது அதிருப்தியை தெரிவித்ததாக ரணில் கூறினார்.

இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டை தெற்கு சூடான் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டும் என்ற ரீதியில் தமது கருத்தை முன்வைத்ததாக அவர் கூறினார்.

ஆனால், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது தடைசெய்யப்பட்ட அமைப்போ அல்லது ஆயுதம் ஏந்திய அமைப்போ இல்லாத நிலையில் அவர்களுடன் தொடர்புகளை வைத்திருப்பது என்பது தெற்கு சூடானுக்குள்ள இறைமை சம்பந்தப்பட்ட உரிமை அல்லவா என்று கேட்கப்பட்டதற்கு பதிலளித்த ரணில், அந்த அமைப்புக்கு தெற்கு சூடான் ஒர் அரசுக்குரிய அங்கீகாரத்தை வழங்க கூடாது என்று கூறினார்.

ரணிலின் தலைமைப் பதவி?

கரு ஜயசூரிய 17 எம்.பி.க்களுடன் 2007 இல் மகிந்த அரசுடன் இணைந்து பின்னர் மீண்டும் 2008 இறுதியில் கட்சிக்கு திரும்பினார்
கரு ஜயசூரிய 17 எம்.பி.க்களுடன் 2007 இல் மகிந்த அரசுடன் இணைந்து பின்னர் மீண்டும் 2008 இறுதியில் கட்சிக்கு திரும்பினார்

இதற்கிடையே, நடந்து முடிந்துள்ள பல தேர்தல்களில் தொடர்ந்தும் தோல்வியை சந்தித்து வருகின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை மாற்ற வேண்டும் என்ற ரீதியில் கட்சிக்குள் பெரும் உட்பூசல்கள் வலுத்து வருகின்றன.

ரணில் விக்ரமசிங்க லண்டனில் இருக்கின்ற நிலையில், கட்சியின் புதிய தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு சஜீத் பிரேமதாச விடுத்த அழைப்பை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துவிட்டு கரு ஜயசூரிய தனிப்பட்ட பயணமாக இந்தியா சென்றுள்ளார்.

இதேநேரத்தில், கட்சிக்குள் கருத்து வேறுபாடுகளை கலைந்து ஐக்கியப்படுத்தும் பணியை தான் கரு ஜயசூரியவிடம் ஒப்படைத்துள்ளதாக லண்டனிலிருந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார் ரணில் விக்ரமசிங்க.

பதவி விலகுவது பற்றியெல்லாம் தாம் முடிவெதுவும் எடுக்க வில்லையென்று பிபிசியிடமும் ரணில் கூறினார்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள