Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 19 ஜுலை, 2011 - பிரசுர நேரம் 17:23 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
இலங்கை அரசு மீது ஐசிஜி கடும் விமர்சனம்
 
'நல்லிணக்கத்தில் அரசாங்கம் அக்கறையில்லை'- ஐசிஜி
'நல்லிணக்கத்தில் அரசாங்கம் அக்கறையில்லை'- ஐசிஜி
பிரஸ்ஸல்சில் இருந்து இயங்கும் இண்டர்னேஷனல் க்ரைஸிஸ் குரூப் என்ற சர்வதேச நெருக்கடிகள் குறித்த அமைப்பு இலங்கை அரசின் மூர்க்கத்தனம் மற்றும் கருத்து மாறுபடுபவர்களை சகித்துக்கொள்ளாத தன்மை காரணமாக அங்கு மீண்டும் மோதல் எழக்கூடிய அபாயம் இருப்பதாகக் கூறுகிறது.

இலங்கை அரசு தமிழ்ப் புலிகளை இரண்டாண்டுகளுக்கு முன்னர் தோற்கடித்ததிலிருந்து,சிறுபான்மை தமிழர்களின் குறைகளை அங்கீகரிக்கவோ அல்லது தீர்க்கவோ தவறிவிட்டது என்று அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் ஒரு புதிய அறிக்கையில் கூறியிருக்கிறது.

இலங்கையில் போர் முடிந்துள்ளதன் பின்னணியில் அங்கு பல விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச நெருக்கடிகள் பற்றி ஆராயும் குழுவான ஐசிஜி சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால், பரந்துபட்ட அளவிலான விமர்சனங்களை இலங்கை அரசின் மீது முன்வைத்துள்ள ஐசிஜி, கடந்தகால முரண்பாடுகளால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதை விட, இலங்கை அதன் கொள்கைகளை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நல்லிணக்க முயற்சிகளிலிருந்து தொலைவிலேயே தள்ளி வைத்திருக்கின்றது என்று தெரிவித்துள்ளது.

'வெற்றிக் களிப்பு மனோபாவம்'

வடக்கில் தேர்தல் பிரசாரம்
ஜனாதிபதி மகிந்த பிரசாரத்தில்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம், வெற்றிக்களிப்புடன் மமதை மனோபாவத்துடனேயே இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள சர்வதேச நெருக்கடிகள் பற்றி ஆராயும் குழு, சிறுபான்மை மக்கள் அவர்களின் எதிர்காலம் பற்றிய தீர்மானங்களின் போது ஒதுக்கப்படுவதாகவும், தேர்தல்களில் மோசடிகள் செய்து, சிவில் சமுகத்தினர் வாய்கள் கட்டப்பட்டு மௌனிகளாக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

வன்முறைகளிலும் மோசடிகளிலும் ஈடுபடும் தமிழ் துணைக் குழுக்களைப் பயன்படுத்தி, முன்னர் போர் நடந்த பிரதேசங்களில் அரசியல் நடவடிக்கைகள் நசுக்கப்பட்டு வருவதாக பிரசல்ஸை தளமாகக் கொண்டு இயங்கும் ஐசிஜி அமைப்பு கூறுகிறது.

இலங்கையில் நீண்டகாலம் நடந்த போரை, வெறுமனே மோசமான பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என்று மட்டும் கருதாமல், அதனை அநீதி, அடக்குமுறைகளால் உருவான ஒரு பெரும் இன முரண்பாட்டின் பகுதி எனவும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சர்வதேச நெருக்கடிகள் பற்றி ஆராயும் குழுவின் நிலைப்பாடு.

அரசாங்கம் நிராகரிப்பு

இதேவேளை, இலங்கை தொடர்பில் ஐசிஜி வெளியிட்டுள்ள இந்த அறிக்கையை ‘முட்டாள் தனமானது’ என்று நிராகரித்துள்ளார் அரசாங்க தரப்பு நடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி மகிந்தவின் ஆலோசகருமான ரஜீவ விஜேசிங்க.

அண்மைக் கால தேர்தல்கள் எல்லாம் நியாயமாக நடந்ததாகவே பொதுவாகப் பார்க்கப்படுவதாகவும், போர்க்காலத்தில் நிகழ்ந்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் கொடூரங்கள் பற்றி வலியுறுத்துகின்ற ஐசிஜி,
பழைய ஏற்பாட்டு சித்தாந்தங்களுடன் பழிக்குப் பழி என்ற தோரணையில் செயற்படுவதாகவும் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐசிஜி வெளியிட்டுள்ள அறிக்கை, இலங்கையின் தற்போதைய நிலைமையைப் பிரதிபலிப்பதாகவே இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறுகின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்து

'பேச்சுக்களில் கருத்தொற்றுமை ஏற்பட்டு வருகிறது' - த.தே.கூ
'பேச்சுக்களில் கருத்தொற்றுமை ஏற்பட்டு வருகிறது' - த.தே.கூ
அரசியல் நல்லிணக்க முயற்சிகளில் இலங்கை அரசின் அக்கறையின்மை பற்றிய ஐசிஜியின் கருத்துப் பற்றி தமிழோசைக்கு செவ்வியளித்த சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தைகளும் காலத்தை இழுத்தடிக்கும் விதமாகவே இருப்பதாகக் கூறினார்.

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாகவே அரசாங்கம் இந்தப் பேச்சுக்களை நடத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

ஆனால், அரசாங்கத்துக்கும் தமது கட்சிக்கும் இடையில் அரசியல் தீர்வுகள் குறித்து கருத்தொற்றுமைகள் ஏற்பட்டுவருவதாகவும், பல முக்கிய விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்றது.

ஆளுந் தரப்புக்குள்ளேயே நிலவுகின்ற முரண்பாடுகள் காரணமாக சில தடைகள் இருப்பதாகவும், காலத்தை இழுத்தடிக்காமல் தீர்வுக்கு வருமாறு அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுமந்திரன் தமிழோசையிடம் கூறினார்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள