http://www.worldservice.com/tamil

29 மே, 2010 - பிரசுர நேரம் 16:36 ஜிஎம்டி

வாழ்வா நோவா காசா ?

கிரேக்கம் கேட்கும் விலைக்கு நவீன இன்சுலின் மருந்தை விற்க முடியாது என டென்மார்க் மருந்து உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீரிழிவு நோய்க்கு எதிரான இன்சுலின் மருந்தைத் தயாரிக்கும் உலகின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான நோவா நோர்டிஸ்க் நிறுவனம் தனது நவீன இன்சுலின் ஊசிக் கருவியை கிரேக்கத்திற்கு இனிமேல் வழங்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.

பயங்கரமான பொருளாதார நெருக்கடியில் உள்ள கிரேக்க அரசு தனது செலவினங்களைத் குறைத்துக்கொள்ளும் கடும் முயற்சியின் ஒரு கட்டமாக அனைத்து மருந்துப் பொருட்களின் விலைகளும் கட்டாயமாக கால் பங்கு குறைக்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது.

ஆனால் கிரேக்கம் கேட்கும் விலைக்கு தங்களால் இந்த நவீன இன்சுலின் மருந்தை விற்க முடியாது என்பதால் நோவா நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த நடவடிக்கையால் அதன் கருவியைப் பயன்படுத்தும் 50 ஆயிரத்துக்கும் மேலான கிரேக்க நீரிழிவு நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள், ஏன் மரணத்தையும் எதிர் நோக்குவார்கள் என்று கிரேக்க நீரிழிவு நோயாளர் நல அமைப்புத் தெரிவித்துள்ளது.

"நோவா நோர்டிஸ்க் செய்வது ஒரு கொடிய அச்சுறுத்தல், தங்களுக்குள்ள சமூகப் பொறுப்புணர்வை அவர்கள் மீறும் நடவடிக்கை இது" என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஆனால் நோவா நிறுவனமோ கிரேக்க அரசாங்கத்தின் நிதி நிர்வாகத்தைக் குற்றம் சாட்டியிருக்கிறது.

தமது அந்த நவீன கருவிக்குப் பதிலாக பொது இன்சுலின் மருந்தான குளுக்காஜனை கிரேக்கத்துக்கு இலவசமாக வழங்க தாங்கள் முன்வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.