தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிகலாவின் உறவினரும், அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டவருமான ராவணனை கோவை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அவரது உதவியாளர் மோகனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணத்துக்காக கடத்துதல், சட்டவிரோதமாகத் தடுத்து வைத்தல், பணம் பறி்ப்பு, கிரிமினல் சதித்திட்டம் ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் சிறுமுகையை அடுத்த கிச்சகத்தியூரைச் சேர்ந்த ரவிகுமார் என்பவர் வியாழனன்று கோவை போலீஸ் கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு மே மாதம், ராவணனின் ஆட்கள் திடீரென வந்து தன்னை அவரிடம் அழைத்துச் சென்றதாகவும், தான் பஞ்சாயத்தில் ஒப்பந்தப் பணியைத் தொடர வேண்டுமானால், 10 லட்சம் தர வேண்டும் என ராவணன் மிரட்டியதாவும் புகாரில் ரவிகுமார் கூறியுள்ளார்.
அதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் தன்னை கத்தி முனையில் ராவணன் ஆட்கள் கடத்திச் சென்று, ஒரு கிடங்கி்ல் வைத்து அடித்து உதைத்ததாகவும், தனது நண்பர் மூலம் 10 லட்சம் ரூபாய் கொடுத்த பிறகே தான் விடுவிக்கப்பட்டதாகவும் ரவிகுமார் தனது புகாரில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராவணனை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, ரவிகுமார் தைரியமாக போலீசில் புகார் செய்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இன்னொருபுறம், சசிகலாவின் சகோதரர் திவாகரனையும் போலீசார் தேடி வருகிறார்கள்.







