bbc.co.uk navigation

ராஜீவ் கொலை வழக்கு: தூக்கு தண்டனை தேதி குறிப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 26 ஆகஸ்ட், 2011 - 11:48 ஜிஎம்டி
தூக்குக் கயிறு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்று வேலூர் மத்திய சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார்.

இது குறித்த அதிகாரபூர்வ தகவல் தமக்கு அளிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

1991 ஆம் ஆண்டு மே மாதம் ராஜிவ் காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரம்பதூரில் விடுதலைப் புலி தற்கொலை குண்டுதாரியால் கொல்லப்பட்டார்.

அதன் பின்னர், மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் கைதான முருகன், பேரறிவாளன், சாந்தன் மற்றும் நளினி ஆகிய நால்வருக்கும் இந்திய உச்சநீதிமன்றம் 1999 ஆம் ஆண்டு தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

பின்னர், காங்கிரஸ் தலைவரான ராஜிவ் காந்தியின் மனைவி சோனியாகாந்தியின் பரிந்துரையின் பேரில் நளினியின் கருணை மனு ஏற்கப்பட்டு அவரின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

20 ஆண்டுகளுக்கும் அதிக காலம் சிறையில்

நளினி மற்றும் முருகன் ஆகியோர் விசாரணையின் போது

நளினி மற்றும் முருகன் ஆகியோர் விசாரணையின் போது

20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தை சிறையில் கழித்த இந்த மூவரையும் தூக்கிலிடக் கூடாது என்று மனித உரிமை அமைப்புக்களும், சில அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இவர்களை தூக்கிலிட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டவர்கள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் புகழேந்தி, இந்த விடயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு தூக்கு தண்டனையை நிறுத்துவார் என்று அந்த மூவரும் நம்பியிருந்ததாகத் தெரிவித்தார்.

வெள்ளிக் கிழமையன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் நாள் குறித்து அந்த மூவருக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டதாகவும், அதன் பிறகு தான் அவர்களை சந்தித்த போது அம் மூவரும் நம்பிக்கையுடன் காணப்பட்டதாகவும் புகழேந்தி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அதேநேரம் தமிழக சட்டசபையில் இது தொடர்பாக ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வர புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எடுத்த முயற்சிகளுக்கும் பயன்கிட்டவில்லை. இது குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி சட்டசபையில் கூறிய கருத்துக்களும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

பிறகு தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி, இந்தப் விடயத்தை முதல்வர் ஜெயலலிதா அவையில் இருந்த சமயத்தில் மூன்று முறை தான் எழுப்ப முயன்றதாகவும், ஆனால் தனக்கு ஆதரவாக எந்த ஒரு உறுப்பினரும் குரல் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.