|
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு சர்ச்சையின் பின்னணி
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை அடுத்த ஆண்டு கோவையில் நடத்தப் போவதாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்கள் சமீபத்தில்
அறிவித்தார். இதை ஒட்டி உருவாகியிருக்கும் சர்ச்சைகள் தொடர்பான செய்திகள்.
ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்தப் போவதாக கருணாநிதி சமீபத்தில் அறிவித்திருந்தார். ஆனால் இது முறையான மாநாடு அல்ல என்ற சர்ச்சை தோன்றியுள்ளது. உலகத் தமிழ் மாநாடுகளை நடத்துவதற்கு பொறுப்பான அமைப்பான IATR எனப்படும் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி கூட்டமைப்பின் ஒப்புதல் இதற்கு கிடைக்கவில்லை என்றும், இதனால் இந்த மாநாடு ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு என்றில்லாமல், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்கிற பெயரில் நடத்தப்படும் என்றும் தற்போது தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கான பின்னணி காரணங்கள் குறித்தும், இந்த விடயத்தில் தமிழக அரசுக்கும் சர்வதேச தமிழ் ஆராய்ச்சிக் கூட்டமைப்பின் தலைவர் நொபுரு கரஷிமா அவர்களுக்கும் இடையிலான கருத்து மாறுபாடுகள் குறித்தும், சர்வதேச தமிழ் ஆராய்ச்சிக் கூட்டமைப்பின் இந்திய துணைத் தலைவரும் முன்னாள் துணை வேந்தருமான வி சி குழந்தைசாமி அவர்கள் தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
"மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை"- பேராசிரியர் கா. சிவத்தம்பி இலங்கைத் தமிழர் விவகாரத்தில் கருணாநிதியின் நிலைப்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் நிலவும் சூழலில் அவர் கூட்டியுள்ள உலகத் தமிழ் மாநாட்டில் தாம் பங்கேற்பது பொருத்தமற்றதாக இருக்கும் என்று இலங்கைத் தமிழ் அறிஞர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.
“உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அரசியலை புகுத்துவது சரியல்ல”--திமுக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று சிவத்தம்பி அவர்கள் கூறியிருப்பது குறித்து தமிழோசையிடம் கருத்து தெரிவித்த தமிழக ஆளும் கட்சியான திமுகவைச்சேர்ந்த, தமிழக அரசின் திட்டக் குழு துணைத் தலைவர் பேராசிரியர் நாகநாதன் அவர்கள், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை அரசியல் கண்ணோட்டத்துடன் நோக்கக் கூடாதென கூறினார்.
“சிவத்தம்பி மாநாட்டில் கலந்து கொள்வார்”—கருணாநிதி சிவத்தம்பி அவர்களின் செவ்வி ஒலிபரப்பான இரு தினங்களுக்குப் பிறகு இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட தமிழ்நாட்டின் முதல்வர் மு கருணாநிதி அவர்கள், பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதாக தெரிவித்திருப்பதாகவும், இந்த மாநாட்டில் விவாதப் பொருட்களாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விடயங்களாக ஐந்து கருப் பொருட்களை அவர் பரிந்துரைத்துள்ளார் என்றும் தெரிவித்திருக்கிறார்.
“மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில் இறுதி முடிவெடுக்கவில்லை”-- சிவத்தம்பி கருணாநிதியின் அறிக்கை குறித்து தமிழோசையிடம் கருத்து தெரிவித்த சிவத்தம்பி அவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வது தொடர்பில் தாம் இன்னமும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||