05 மார்ச், 2009 - பிரசுர நேரம் 12:37 ஜிஎம்டி
பாகிஸ்தானின் லாகூர் நகரில், இலங்கை கிரிக்கெட் விளையாட்டாளர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தீவிரவாதத் தாக்குதல் குறித்து தமிழோசையில் இடம்பெற்ற செய்திகள் மற்றும் செவ்விகள்.
04/03/2009
இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது லாகூரில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, அந்த அணியினர் கொழும்பு திரும்பியுள்ளனர்.
விசேட விமானம் மூலம் கொழும்பு வந்திறங்கியவர்களுக்கு உணர்ச்சி ததும்பும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த தாக்குதல்களை யார் நடத்தியிருப்பார்கள் என்ற ஊகங்கள் பல்வேறு ஊடகங்களில் பல்வேறு விதமாக வெளிவந்திருக்கும் நிலையில், இந்தியா இந்த தாக்குதல்களின் பின்னணியில் இருப்பதாக பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ எஸ்.ஐ.யின் முன்னாள் தலைவர் ஹமித் குல் குற்றம் சாட்டியிருந்ததாக செய்திகள் வந்திருந்தன.
'ரா' என்ற இந்தியாவின் உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் பி.ராமன் இக்குற்றச்சாட்டுகள் குறித்து தமிழோசையில் கருத்து வெளியிட்டார்.
03/03/2009
இலங்கை கிரிக்கெட் அணியினரின் இந்த பாகிஸ்தான விஜயம், இந்தியா அங்கு ஆடவிருந்த ஒரு போட்டித் தொடருக்கு மாற்றாக அவசரகதியில் ஏற்பாடுசெய்யப்பட்ட ஒன்று.
இந்த போட்டித் தொடருக்கு இலங்கை ஒப்புக்கொண்டது பாகிஸ்தான கிரிக்கெட் சபைக்கு மனநிறைவை ஏற்படுத்தியிருந்திருக்கலாம். ஆனால் தற்போது நடந்துள்ள இந்த தாக்குதல் சம்பவம், பாகிஸ்தானுக்கு மிக மோசமான ஒரு பின்விளைவை ஏற்படுத்தகூடியது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தாக்குதல் குறித்து பிபிசி செய்தியாளர்கள் வழங்கும் விபரங்களின் தொகுப்பு.
பாகிஸ்தானில் இந்த தாக்குதலுக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதைவிட, பாகிஸ்தானிய கிரிக்கெட்டின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.
கிரிக்கெட் விளையாடும் பல முன்னோடி நாடுகள் பாகிஸ்தானுக்கு விளையாடப்போக ஏற்கனவே மறுத்துள்ளன.
பாகிஸ்தான் எதிர்வரும் 2011ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இணைந்து நடத்தும் வாய்ப்பும் இப்போது சந்தேகத்துக்குள்ளாகியிருக்கிறது.
இது குறித்து பிபிசி விளையாட்டுப் பிரிவு செய்தியாளர் வழங்கும் செய்திக் குறிப்பு
பல தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்கொண்டுவரும் பாகிஸ்தான் ஒரு தோல்வியடைந்த நாடா என்ற கேள்வியும் எழுகிறது.
லாகூரில் நடந்த இந்த தாக்குதல்கள் பாகிஸ்தான் அரசு எந்த அளவுக்கு நாட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பதை வெளிக்காட்டுகின்றன.
இது தொடர்பில் பிபிசி செய்தியாளர்கள் வழங்கும் விபரங்களின் தொகுப்பு
இலங்கை கிரிக்கெட் விளையாட்டாளர்களின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை இலங்கை அரசு கண்டித்திருக்கிறது.
இது ஒரு கோழைச் செயல் என இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
லாகூர் தாக்குதல்கள் இந்தியாவில் மும்பை நகரில் கடந்த நவம்பரில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களைப் போலவே நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகளுக்கு எதிராக திட்டவட்டமான நடவடிக்கைகளை எடுக்காதவரை இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கவே செய்யும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் விளையாட்டாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தீவிரவாதத்தாக்குதல்களை அடுத்து இத்தகைய விளையாட்டுப் போட்டிகளுக்கு முழுமையான பாதுகாப்பு தரப்படுவது, பாகிஸ்தானில் மட்டுமல்ல, தீவிரவாதத்தினை எதிர்கொண்டுவரும் இந்தியா போன்ற பிற தெற்காசிய நாடுகளிலும் சாத்தியம்தானா என்ற கேள்வி எழுகிறது.
முன்னாள் தமிழ்க தலைமைக் காவல்துறை இயக்குநரும், விளையாட்டுத் துறையில் நிர்வாகப் பதவிகளில் இருந்தவருமான வால்டர் தேவாரம் இது பற்றி தமிழோசையில் கருத்து வெளியிட்டார்.