Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 மே, 2005 - பிரசுர நேரம் 14:38 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
தமிழார்வலர்களின் போராட்டம் தேவையா?
 
தமிழ் நாட்டில் ஆங்கில விளம்பரப்பலகைகள் வைக்கும் வணிக நிறுவனங்களுக்கு எதிராக சில அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் ஆதரவுக் குழுக்கள் ஆர்ப்பாட்டம்.

பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சில அமைப்புகள் திங்கட்கிழமையன்று இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின. ஆங்கில பெயர்ப்பலகைகள் மீது தார் பூசி ஆர்ப்பாட்டக்காரர்கள் அழித்தனர்

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

மாநிலமெங்கும் நடந்த ஆர்ப்பாட்டங்களிலும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

திமுக தலைவர் துரைமுருகன்
திமுக தலைவர் துரைமுருகன்

இந்தப் போராட்டத்தில் முக்கிய எதிர்க்கட்சியான திமுக கலந்துகொள்ளவில்லை எனினும், இந்தபோராட்டத்திற்கு அதன் ஆதரவு இருந்திருக்கிறது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்னின்று நடத்திய திமுகவின் இன்றைய மொழிக்கொள்கை மற்றும் இந்தபோராட்டம் குறித்து அதன் நிலைப்பாடு ஆகியவை குறித்து திமுகவின் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் அவர்களிடம் கேட்டபோது, தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை அமலில் இருந்து வரும் வேளையில், ஆங்கில விளம்பரப்பலகைகளை அகற்றுவதற்கு எதிராக நடக்கும் இப்போராட்டம் அவ்வளவு அவசியமானது அல்ல என்றாலும், போராட்டம் நடத்துவோரின் மொழி உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது என்றார்.

முந்தைய திமுக அரசு, தமிழ் வழிக்கல்வியை அமல்படுத்தவில்லை என்ற தமிழறிஞர்களின் கருத்தை அவர் மறுத்தார்.

மொழிப்போராட்டம் அவசியமா? மொழியறிஞர்கள் விவாதம்

ஒரு நீண்ட கால மொழிப்போராட்ட வரலாறு தமிழகத்திற்கு உண்டு. இந்தி எதிர்ப்பு போராட்டம் திராவிட இயக்கக் கட்சிகளை அரசியல் அதிகாரத்திற்கு கொண்டு சென்றது. ஆனால் பொருளாதாரம் உலகமயமாகிவரும் இன்றைய சூழலில் தமிழ் நாட்டில் இத்தகைய போராட்டங்கள் எந்த அளவிற்கு அவசியம் என்ற கேள்வியை சென்னை மாநிலக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் மா.நன்னன் அவர்களும், அமெரிக்காவின் புளூமிங்டன் நகரில் பெத்தனி கல்லூரியில் அகெடெமிக் டீன் ஆகப் பணிபுரியும் டாக்டர். எம்.எஸ்.திருமலை அவர்களும் விவாதிக்கிறார்கள்.

இந்தபோராட்டம் தேவையானது அவசியமானது என்றார் பேராசிரியர் மா.நன்னன். இந்தப் போராட்டத்தின் அவசியத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்றாலும், வணிகர்களே இந்தப்பிரச்சினையின் பொருளாதார முக்கியத்துவத்தை உணர்ந்து, தமிழிலும் விளம்பரப் பெயர்ப் பலகைகளை வைக்கவேண்டும் என்றார் டாக்டர். திருமலை.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள