
பிரிட்டன் வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக்
கனடாவுடன் சேர்ந்து வெளிநாடுகளில் கூட்டு-தூதரகங்களை அமைக்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை கனடா தலைநகர் ஒட்டாவாவில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜோன் பேய்ர்தை சந்திக்கவுள்ள பிரிட்டனின் வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக் இந்தப் புதிய கூட்டு இராஜதந்திர முயற்சி பற்றி விபரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்காலத்தில் இந்த கூட்டு-வெளிநாட்டு தூதரக உடன்படிக்கையில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் உள்வாங்கப்படவுள்ளன.
வெளிநாடுகளில் குறைந்த செலவில் கூடுதல் இராஜதந்திர பலன்களைப் பெற இந்தத் திட்டம் உதவும் என்று ஹேக் கூறியுள்ளார்.
பிரிட்டனோ கனடாவோ இப்போது வெளிநாட்டுத் தூதரகங்களை வைத்திருக்காத நாடுகளில் இந்த கூட்டு- இராஜதந்திர நடவடிக்கையை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கனேடிய நாடாளுமன்றத்தில் பேசிய பிரிட்டனின் பிரதமர் டேவிட் கமரோன்,' நாங்கள் இரண்டு வெவ்வேறான நாடுகள் தான், ஆனால் ஒரே மகாராணியின் கீழ், ஒரேவிதமான விழுமியங்களால் ஒன்றிணைந்தவர்கள்' என்று கூறியிருந்தார்.
கனடாவுக்குப் பயணம் மேற்கொள்ள முன்னதாக அறிக்கையொன்றை விடுத்துள்ள வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக்,'இந்த கூட்டுநடவடிக்கை, குறைந்த செலவில் எமது வியாபாரத்துக்கும் எமது மக்களுக்கும் இன்னும் பரந்துபட்ட வாய்ப்புகளை அதிகப்படுத்தும்' என்று சுட்டிக்காட்டியுள்ளார்.







