
கடந்த 5 தசாப்தங்களாக பர்மாவில் செய்தி தணிக்கைச் சட்டம் நடைமுறையில் இருந்தது
பர்மாவில் நடைமுறையில் இருந்த ஊடகங்களின் செய்திகள் மீதான தணிக்கை முறையை ரத்துசெய்துவிட்டதாக அந்நாட்டு ஊடகத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
பர்மாவில் செய்தியாளர்கள் தமது செய்திகளை பிரசுரிப்பதற்கு முன்னதாக அவற்றை அரசின் 'ஊடகங்கள் பற்றிய விசாரணை மற்றும் பதிவு திணைக்களத்துக்கு' அனுப்பி தணிக்கைக்கு உட்படுத்திய பின்னரே வெளியிட முடியும் என்ற சட்டம் இதுவரை இருந்துவந்தது.
இனிமேல் அவ்வாறான அரசின் தணிக்கை நடைமுறை அவசியம் இல்லை என்பதால் பழைய சட்டம் ஒழிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகின்றது.
இருந்தபோதிலும், ஊடகவியலாளர்கள் வெளியிடுகின்ற செய்திகளுக்காக அவர்களை தண்டிக்கும் கடுமையான சட்டங்கள் தொடர்ந்தும் அங்கு நடைமுறையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 50 ஆண்டுகளாக பர்மிய அரசு ஊடகங்களை எல்லாவழிகளிலும் கட்டுப்படுத்தி வைத்திருந்தது.
ஆனால் கடந்த ஆண்டில் சிவில் அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்றதன் பின்னர், அங்குள்ள கடுமையான சட்டங்கள் படிப்படியாக தளர்த்தப்பட்டுவருகின்றன.
இதேவேளை, பர்மாவில் தனியார் ஊடக நிறுவனங்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அங்கு புதிய ஊடகச் சட்டமொன்று நடைமுறைக்கு வந்தபின்னர் சாத்தியமாகும் என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.








