
பிரதமர் ரியாத் ஹிஜாப்
சிரியாவின் அதிபர் அசாத்தின் ஆட்சியை பயங்கரவாத ஆட்சி என்று சித்தரித்து, அதிலிருந்து விலகியுள்ள அந்த நாட்டின் பிரதமர் ரியாத் ஹிஜாப் அவர்கள், தான் புரட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார்.
ஹிஜாப் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் ஜோர்தானுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுவதை ஜோர்தானிய அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் மறுத்துள்ளார்.
பிரதமர் இவ்வாறு விலகியுள்ளமை அசாத் அரசாங்கத்துக்கு ஒரு பேரடி என்று அந்த பிராந்தியத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் இரு அமைச்சர்களும் அசாத்தின் அணியில் இருந்து விலகிவிட்டதாக எதிர்த்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தப்பிச் செல்ல முயன்ற நிதி அமைச்சரான முஹமட் ஜலிலாதி கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், ஜலிலாதி அவர்களது என்று கூறப்படும் தொலைபேசிச் செவ்வி ஒன்றை ஒளிபரப்பிய சிரிய அரசாங்க தொலைக்காட்சி, அவர் வழமைபோல தனது அலுவலகத்தில் பணியாற்றுவதாகத் தெரிவித்தது.








