bbc.co.uk navigation

சிறார்களை படையில் சேர்த்தவருக்கு 14 ஆண்டுகள் சிறை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 ஜூலை, 2012 - 15:32 ஜிஎம்டி

தாமஸ் லுபாங்கா

சிறார்களை படையில் சேர்த்து ஆயுதப் போராட்டம் நடத்தியதானக் குற்றச்சாட்டில், காங்கோவின் முன்னாள் ஆயுதக் குழுத் தலைவரான தாமஸ் லுபாங்காவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

தமது கிளர்ச்சிப் படையில், சிறார்களை 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் அவர் சேர்த்தார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் ஒருவர் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல் முறை.

காங்கோ ஜனநாயகக் குடியரசின் வடகிழக்குப் பகுதியில் உள்ள இட்டூரி இனக் குழுவினரிடையே ஏற்பட்ட மோதல்களில் 60,000 பேர் வரை கொல்லப்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஹேமா பழங்குடி இன ஆயுதக் குழுவான காங்கோலீஸ் தேசியப்பற்றார்கள் ஒன்றியம் எனும் அமைப்புக்கு தாமஸ் லுபாங்கா தலைமையேற்று வந்தார்.

தொடரும் துயரம்

கிளர்ச்சிக் குழுவின் ஒரு தலைவரான ந்டாங்கடா(முன்னால் இருப்பவர்)

காங்கோ ஜனநாயக குடியரசில் பரந்துபட்ட அளவில் நடைபெற்று வரும் மோதல்களில் ஒரு பகுதியாக இந்த மோதல்கள் இடம்பெற்றன.

அங்கு நடைபெற்று வரும் மோதல்களில் இதுவரை ஐம்பது லட்சம் பேர் பலியாகியிருப்பார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தற்போதும் காங்கோவில் நடைபெற்றும் வரும் சண்டைக்கும் லுபாங்காவின் வழக்குக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

அங்கு ஜெனரல் பாஸ்கோ ந்டாங்கடாவுக்கு விசுவாமானப் படைகள் நாட்டின் கிழக்கு நகரமான கோமாவை அச்சுறுத்தி வருகின்றனர்.

தனது முன்னாள் கூட்டாளியான லுபாங்கா செய்த அதே குற்றங்களை ஜெனரல் ந்டாங்கடாவும் செய்துள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

“வீட்டுக்கு ஒரு பிள்ளை தேவை”.

காங்கோவின் கிளர்ச்சிப் படைகளில் சிறார்கள்

லுபாங்காவின் வழக்கு விசாரணையின் போது அவர் எப்படி மக்களின் வீடுகளுக்கு சென்று போர் முயற்சிகளுக்கு ஏதாவது நன்கொடை அளிக்கும்படி கேட்பார் என்று எடுத்துக் கூறப்பட்டது.

அதன்படி அவர் மக்களிடம் பணமோ, அல்லது ஒரு பசுவோ, அல்லது தமது கிளர்ச்சிப் படைகளில் போராட ஒரு சிறுவனையோ அளிக்கும்படி கோருவார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, பத்து வயது சிறார்கள் கூட, ஒரு பயிற்சி முகாமில் இருப்பதை காட்டும் காணொளி திரையிடப்பட்டது.

மற்றொரு காணொளியில் சிறார்கள் அவருக்கு பாதுகாவலர்களாக இருப்பதும் தெரிந்தது.

கடந்த 2005 ஆம் ஆண்டு ஐ நா வின் அமைதி காக்கும் படையினரால், இதர ஆயுததாரிகளுடன் லுபாங்காவும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, லுபாங்கா நடந்து கொண்டவிதமும், அவர் வழங்கிய ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியது என்று தீர்ப்பை வழங்கிய நீதிபதி அட்ரியன் ஃபுல்ஃபோர்ட் தெரிவித்தார்.

விமர்சனம்

எனினும் இந்த வழக்கில் வாதிகள் சார்பில் முன்னர் ஆஜரான வழகறிஞர் லூயி மொரேனோ ஒகம்போவை நீதிபதி கடுமையாக விமர்சித்தார்.

அவர் தவறுகளை இழத்தார் என்றும், தமது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை வழங்கவில்லை என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் லுபாங்காவுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று மொரேனோ ஒகம்போ கோரியிருந்தார்.

BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.