
'புதிய பிரச்சனையில் ஸ்ட்ரோஸ்-கான்'
சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எஃப்) முன்னாள் தலைவர் டொமினிக் ஸ்ட்ரோஸ்-கான், பாலியல் விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் பிரான்ஸ் நாட்டு காவல்துறையினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
வடக்கே, லீல்லோ நகரிலுள்ள காவல்துறை நிலையத்துக்கு சென்றிருந்தபோதே அவர் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பாரிஸிலும் வாஷிங்டனிலும் உள்ள களியாட்ட விடுதிகளில் பாலியல் தொழில் நடத்தும் கும்பலொன்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்டங்களின்போது பாலியல் தொழில் புரியும் பெண்களுடன் உறவு வைத்துக்கொண்டதாக ஸ்ட்ரோஸ்-கான் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், நிவ்யோர்க்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிப்பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, அவர் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் பதவியிலிருந்து கடந்த ஆண்டில் விலகியிருந்தார்.
ஆனால் அவர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்திருந்தார். அங்கு அவர் மீது தொடரப்பட்டிருந்த வழக்கும் பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








