
ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வரும் இலங்கை அகதிகள் எண்ணிக்கை அதிகம்
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து படகு மூலம் ஆஸ்திரேலியா சென்ற தஞ்சம் கோரிகளை சமூகத்தில் கலப்பதை அனுமதிக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.
அகதிகளின் ஆடையாளம் உறுதிப் படுத்தப்படும்வரை முகாம்களில் தடுத்து வைக்கும் நடைமுறை இதுவரை அமலில் இருந்தது.
தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளதுடன் – ஏற்கனவே தடுப்பில் இருப்போர் படிப்படியாக விடப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த நடவடிக்கை காரணமாக தமிழ் இளைஞர்கள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள முகாம்களில் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த 3800 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களின் கணிசமானோர் விடுவிக்கப்படுவார்கள் என்று தாம் நம்புவதாகவும் ஆஸ்திரேலிய தமிழர் பேரவையின் அகதிகளுக்கான இணைப்பு அலுவலர் பால விக்னேஸ்வரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
படகில் வரும் அகதிகளை ஊக்குவிக்கும் எவ்வித நடவடிக்கைகளையும் அரசு எடுக்கக் கூடாது என்று ஆஸ்திரேலிய வலதுசாரி அமைப்புகள் கூறிவந்தன.
அதே நேரம் அகதிகள் தொடர்பாக ஆஸ்திரேலிய கடுமையான நிபந்தனைகளை கடைபிடிப்பதன் காரணமாகத்தான் பலர் உயிரைப்பயணம் வைத்து ஆபத்தான கடல் பயணம் செய்து அந்நாட்டுக்குள் வர முயல்கின்றனர் என்று சில மனித உரிமை அமைப்புக்கள் கூறிவருகின்றன.
தற்போது முதல் கட்டமாக 18 மாதங்களுக்கும் அதிகமான காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்படுவதாகவும், இவர்களுக்கு பிரிட்ஜ் விசா என்று கூறப்படும் இணைப்பு விசா கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பால விக்னேஸ்வரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
அரசியல் காரணங்களுக்காகவும், ஏராளமானோரை விடுவிப்பதால் செலவு குறையும் என்ற பொருளாதார நோக்கத்துக்காககவும் இந்த முடிவை அரசு எடுத்திருக்கலாம் என்று செயற்பாட்டாளர்கள் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.








