
நடிகை சில்க் ஸ்மிதா
தென்னிந்தியத் திரையுலகின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்த காலஞ்சென்ற சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள ஹிந்தி திரைப்படம் வெள்ளியன்று வெளியிடப்பட்டுள்ளது.
1979ல் வண்டிச் சக்கரம் என்ற தமிழ்ப் படத்தில் மதுபான விடுதி மங்கையாக வந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை விஜயலட்சுமி சில்க் ஸ்மிதாவாக மாறிப்போனார்.
கிறங்கவைக்கும் உடல் வனப்புக்கும் மயக்கம் தரும் பார்வைக்கும் சொந்தக்காரியாக விளங்கிய சில்க் கொஞ்சம் கொஞ்சமாக தென்னிந்தியத் திரையுலகின் கவர்ச்சி ராணியாக உருவெடுத்தார்.
படம் வெற்றி பெற வேண்டுமானால் சில்க் ஸ்மிதா திரையில் தோன்றுவது அவசியம் என்ற ஒரு காலகட்டம் தென்னிந்திய சினிமாவில் இருந்தது.
தென்னிந்தியத் திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய பின்னர் ஹிந்திப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
கவர்ச்சிக் குத்தாட்டம், சின்னச் சின்ன வேடங்கள் என 400க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
புகழும் பணமும் அங்கீகாரமும் இருந்தாலும், சக நடிகர்களின் தயாரிப்பாளர்களின் பாலியல் வக்கிரங்களுக்கு ஆளாகி சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை சீரழிந்து வந்ததாக பேச்சு அடிபட்டு வந்தது.
இந்நிலையில் வெறும் 35 வயதே ஆன சில்க் ஸ்மிதா, ஒரு நாள் அவரது படுக்கையறையில் சடலமாகக் கிடந்தார்.
அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது.
"டர்ட்டி பிக்சர்" திரைப்படத்தில் வித்யா பாலன் சில்க் ஸ்மிதாவாக வருகிறார்.








