
ஷேக்ஸ்பியர் பற்றிய சர்ச்சையை தூண்டும் படம்
அனானிமஸ் என்ற பெயரில் வெளிவந்துள்ள ஒரு புதிய படம், உலகப் பிரசித்தி பெற்ற நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் தொடர்பான ஒரு பழைய சர்ச்சையை மீண்டும் கிளறுவதாக அமைந்துள்ளது.
ஷேக்ஸ்பியர் எழுதியதாக சொல்லப்படுகின்ற பெரும்புகழ் பெற்ற நாடகங்களை உண்மையில் அவர் எழுதியவில்லை. அவற்றை உண்மையில் எழுதியது எர்ல் ஒஃப் ஒக்ஸ்பர்ட் சிற்றரசரான எட்வர்ட் டி வியர் என்பவரே என்று இந்தப் படம் வாதிடுகிறது.
இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஷேக்ஸ்பியர் அறக்கட்டளை இங்கிலாந்தில் அவரது நினைவாகப் பெயர் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பெயர்ப் பலகைகளில் பெயர்களை அடித்துவிடுகின்ற நூதனப் போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் முதலாம் எலிசபெத் ராணியாரை எதிர்த்து நடந்த எஸ்ஸெக்ஸ் புரட்சி காலத்தைக் காட்டும் இந்தப் புதிய படமான அனானிமஸ், வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில இலக்கிய வல்லுநர்கள் இடையில் நெடுங்காலமாக இருந்துவருகின்ற ஒரு பெரிய சர்ச்சையைக் கதைக்களமாகக் கொண்டுள்ளது.
ஆங்கில இலக்கியத்தின் மிக முக்கியச் சொத்தாகக் கருதப்படுகின்ற நாடகத் தொகுப்புகளை எழுதியது ஸ்டிராட்ஃபர்ட் அப்பான் ஏவனில் பிறந்த சாமானியரான வில்லியம் ஷேக்ஸ்பியரா அல்லது ஆக்ஸ்பர்ட் கோமகனான எட்வர்ட் டி வியர் என்பவரா என்ற சர்ச்சசையில், எட்வர்ட் டி வியர்தான் இதை எழுதினார் என்று இந்தப் படம் வாதிடுகிறது.

பெயர்ப்பலகையில் பெயரை அழிக்கும் போராட்டம்
இந்தப் படம் ஆங்கிலேயர்களின் கலாச்சாரத்தையும் சரித்திரத்தையும் மாற்றிச் சொல்லுவதற்கான ஒரு முயற்சி என்று ஷேக்ஸ்பியர் பிறப்பிட அறக்கட்டளை விமர்சித்துள்ளது.
இந்தப் படத்துக்கு எதிர்ப்புக் காட்டும் விதமாக வாரிக் ஷைர் மாவட்டத்தில் ஷேக்ஸ்பியர் பெயரோடு உள்ள சாலையோரத்து பெயர்ப் பலகைகள் மதுபானக்கடை பெயர்ப் பலகைகள் போன்றவற்றில் ஷேக்ஸ்பியரின் பெயரை மட்டும் அடித்துவிடுகிற ஒரு போராட்டத்தை இந்த அறக்கட்டளை நடத்துகிறது.
ஷேக்ஸ்பியர் என்பவர் இங்கிலாந்தின் கலாச்சார மற்றும் வரலாற்று மரபணுவாக இருக்கிறார். அவர்தான் பிரபல நாடகங்களை இயற்றினார் என்பதற்கு நிறைய சரித்திரச் சான்று உள்ளது. ஆகவே இந்த திரைப்படம் எல்லோரையும் ஏமாற்ற முயலும் ஒரு கண்கட்டு வித்தை என்று ஷேக்ஸ்பியர் அறக்கட்டளையைச் சேர்ந்த டாக்டர் பால் எட்மண்ட்சன் கூறுகிறார்.
இந்த சர்ச்சை ஒரு புறமிருக்க அது தேடித்தருகின்ற விளம்பரம் என்னவோ இந்தப் படத்துக்கு பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் மீதான ரசிகர்கள் ஆர்வம் மேலோங்க தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது.








